சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை

Back to Top
கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
11.021   சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

11.021 சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை   ( )
அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான்
அந்தியே போலும் அவிர்சடையான் அந்தியின்
தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான்
வீங்கிருள்சேர் நீல மிடறு.

[1]
மிடற்றாழ் கடல்நஞ்சம் வைக்கின்ற ஞான்று மெல் லோதிநல்லாள்
மடற்றா மரைக்கைகள் காத்தில வேமழு வாளதனால்
அடற்றா தையைஅன்று தாளெறிந் தாற்கருள் செய்தகொள்கைக்
கடற்றாழ் வயற்செந்நெல் ஏறும்வெண் காட்டெங் கரும்பினையே.

[2]
கருப்புச் சிலை அநங்கன் கட்டழகு சுட்ட
நெருப்புத் திருநெற்றி நாட்டம் திருச்சடையில்
திங்கள் புரையும் திரள்பொன் திருமேனி
எங்கள் இமையோர் இறைக்கு.

[3]
இறைக்கோ குறைவில்லை உண்டிறை யேஎழி லார்எருக்கு
நறைக்கோ மளக்கொன்றை துன்றும் சடைமுடி நக்கர்சென்றிப்
பிறைக்கோர் பிளவும் பெறுவிளிக் கொண்டெம் பிரான்உடுக்கும்
குறைக்கோ வணமொழிந் தாற்பின்னை ஏதுங் குறைவில்லையே.

[4]
இல்லை பிறவிக் கடலேறல் இன்புறவில்
முல்லை கமழும் முதுகுன்றில் கொல்லை
விடையானை வேதியனை வெண்மதிசேர் செம்பொற்
சடையானைச் சாராதார் தாம்.

[5]
தாமரைக் கோவும்நன் மாலும் வணங்கத் தலையிடத்துத்
தாம்அரைக் கோவணத் தோடிரந் துண்ணினுஞ் சார்ந்தவர்க்குத்
தாமரைக் கோமளத் தோடுஉல காளத் தருவர்கண்டீர்
தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடிச் சங்கரரே.

[6]
சங்குகோள் எண்ணுவரே பாவையரைத் தம்அங்கம்
பங்குபோய் நின்றாலும் பாய்கலுழிக் கங்கை
வரியராப் போதும் வளர்சடையாய் நின்போல்
பெரியர்ஆ வாரோ பிறர்.

[7]
பிறப்பாழ் குழியிடை வீழ்ந்துநை வேற்குநின் பேரருளின்
சிறப்பார் திருக்கை தரக்கிற்றியேதிரி யும்புரமூன்
றறப்பாய் எரியுற வான்வரை வில்வளைத் தாய்இரவாய்
மறப்பா வரியர நாணிடைக் கோத்தகை வானவனே.

[8]
வானம் மணிமுகடா மால்வரையே தூணாக
ஆன பெரும்பார் அரங்காகக் கானகத்தில்
அம்மா முழவதிர ஆடும் பொழுதாரூர்
எம்மானுக் கெய்தா திடம்.

[9]
இடப்பா கமுமுடை யாள்வரை யின்இள வஞ்சியன்ன
மடப்பால் மொழியென்பர் நின்வலப் பாகத்து மான்மழுவும்
விடப்பா சனக்கச்சும் இச்சைப் படநீ றணிந்துமிக்க
கடப்பார் களிற்றுரி கொண்டுஎங்கும் மூடும்எங் கண்ணுதலே.

[10]
கண்ணி இளம்பிறையும் காய்சினத்த மாசுணமும்
நண்ணி இருந்தால் நலம்இல்லை தண்அலங்கல்
பூங்கொன்றை யின்தேன் பொதியுஞ் சடைப்புனிதா
வாங்கொன்றை இன்றே மதித்து.

[11]
மதிமயங் கப்பொங்கு கோழிருள் கண்டவ விண்டவர்தம்
பதிமயங் கச்செற்ற கொற்றவில் வானவ நற்றவர்சூழ்
அதிகைமங் கைத்திரு வீரட்ட வாரிட்ட தேனுமுண்டு
கதிமயங் கச்செல்வ தேசெல்வ மாகக் கருதுவதே

[12]
கருதுங் கருத்துடையேன் கையுடையேன் கூப்பப்
பெரிதும் பிறதிறத்துப் பேசேன் அரிதன்றே
யாகப் பிறையான் இனியென் அகம்புகுந்து
போகப் பெறுமோ புறம்.

[13]
புறமறையப்புரி புன்சடை விட்டெரி பொன்திகழும்
நிறமறையத்திரு நீறு துதைந்தது நீள் கடல்நஞ்
சுறமறை யக்கொண்ட கண்டமும் சால உறைப்புடைத்தால்
அறமறையச்சொல்லி வைத்தையம் வேண்டும் அடிகளுக்கே.

[14]
அடியோமைத் தாங்கியோ ஆடை யுடுத்தோ
குடியோம்ப மாநிதியங் கொண்டோ பொடியாடும்
நெற்றியூர் வாளரவ நீள் சடையாய் நின்ஊரை
ஒற்றியூர் ஆக்கிற் றுரை.

[15]
உரைவந் துறும்பதத் தேயுரை மின்கள்அன் றாயினிப்பால்
நரைவந் துறும்பின்னை வந்துறுங் காலன்நன் முத்திடறித்
திரைவந் துறுங்கரைக் கேகலம் வந்துறத் திண்கைவன்றாள்
வரைந் துறுங்கடல் மாமறைக் காட்டெம் மணியினையே.

[16]
மணியமரும் மாமாட வாய்மூரான் தன்னை
அணியமர ரோடயனும் மாலும் துணிசினத்த
செஞ்சூட்ட சேவற் கொடியானு மாய்நின்று
நஞ்சூட்ட எண்ணியவா நன்று.

[17]
நன்றைக் குறும்இரு மல்பெரு மூச்சுநண் ணாதமுன்னம்
குன்றைக் குறுவது கொண்டழி யாதறி வீர்செறிமின்
கொன்றைக் குறுநறுங் கண்ணியி னான்றன்கொய் பூங்கயிலைக்
குன்றைக் குறுகரி தேனும்உள் ளத்திடைக் கொள்மின்களே.

[18]
கொண்ட பலிநுமக்கும் கொய்தார்க் குமரர்க்கும்
புண்டரிக மாதினுக்கும் போதுமே மண்டி
உயிரிழந்தார் சேர்புறங்காட் டோரிவாய் ஈர்ப்ப
மயிரிழந்த வெண்டலைவாய் வந்து.

[19]
வந்தா றலைக்கும் வலஞ்சுழி வானவ வானவர்தம்
அந்தார் மகுடத் தடுத்தபைம் போதில்அந் தேனுழக்கிச்
செந்தா மரைச்செல்வி காட்டும் திருவடிக் குஞ்செல்லுமே
எந்தாய் அடித்தொண்டர் ஒடிப் பிடித்திட்ட இன்மலரே.

[20]
மலர்ந்த மலர்தூவி மாமனத்தைக் கூப்பிப்
புலர்ந்தும் புலராத போதும் கலந்திருந்து
கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக் காண்பெளியன்
தெண்ணீர் சடைக்கரந்த தே.

[21]
தேவனைப் பூதப் படையனைக் கோதைத் திருஇதழிப்
பூவனைக் காய்சினப் போர்விடை தன்னொடும் போற்றநின்ற
மூவனை ஈருரு வாயமுக் கண்ணனை முன்னுமறை
நாவனை நான்மற வேன் இவை நான்வல்ல ஞானங்களே.

[22]
நானுமென் நல்குரவும் நல்காதார் பல்கடையில்
கானிநிமிர்த்து நின்றிரப்பக் கண்டிருக்கும் வானவர்கள்
தம்பெருமான் மூவெயிலும் வேவச் சரந்தூற்றல்
எம்பெருமான் என்னா இயல்பு.

[23]
இயல் இசை நாடக மாய் எழு வேலைக ளாய்வழுவாப்
புயலியல் விண்ணொடு மண்முழு தாய்ப்பொழு தாகிநின்ற
மயிலியல் மாமறைக் காடர்வெண் காடர்வண் தில்லைமல்கு
கயலியல் கண்ணியங் காரன்பர் சித்தத் தடங்குவரே.

[24]
அடங்காதார் ஆரொருவர் அங்கொன்றை துன்று
மடங்காதல் என்வளைகொள் வார்த்தை நுடங்கிடையீர்
ஊருரன் சென்றக்கால் உண்பலிக்கென் றங்ஙனே
ஆரூரன் செல்லுமா றங்கு.

[25]
அங்கை மறித்தவ ராலவி உண்ணுமவ் வானவர்கள்
தங்கை மறித்தறி யார்தொழு தேநிற்பர் தாழ்சடையின்
கங்கை மறித்தண வப்பண மாசுணக் கங்கணத்தின்
செங்கை மறித்திர விற்சிவன் ஆடுந் திருநட்டமே.

[26]
நட்டம்நீ ஆடும் பொழுதத்து நல்லிலயம்
கொட்டக் குழிந்தொழிந்த வாகொல்லோ அட்டுக்
கடுங்குன்ற மால்யானைக் காருரிவை போர்த்த
கொடுங்குன்ற பேயின் கொடிறு.

[27]
கொடிறு முரித்தனன் கூறாளன் நல்லன் குருகினஞ்சென்
றிடறுங் கழனிப் பழனத் தரசை எழிலிமையோர்
படிறு மொழிந்து பருகக் கொடுத்துப் பரவைநஞ்சம்
மிடறு தடுத்தது வும்மடி யேங்கள் விதிவசமே.

[28]
விதிகரந்த வெவ்வினையேன் மென்குழற்கே வாளா
மதுகரமே எத்துக்கு வந்தாய் நதிகரந்த
கொட்டுக்காட் டான்சடைமேர் கொன்றைக் குறுந்தெரியல்
தொட்டுக்காட் டாய்கழல்வாய் தொக்கு.

[29]
தொக்கு வருங்கணம் பாடத்தொல் நீறணிந் தேநிலவு
நக்கு வருங்கண்ணி குடிவந் தார்நறும் புன்னைமுன்னம்
அக்கு வருங்கழிக் கானல்ஐ யாறரைக் காணஅன்பு
மிக்கு வரும்அரும் போதரைக் காண வெள்குவனே.

[30]
வெள்காதே உண்பலிக்கு வெண்டலைகொண் டூர்திரிந்தால்
எள்காரே வானவர்கள் எம்பெருமான் வள்கூர்
வடதிருவீ ரட்டானத் தென்னதிகை மங்கைக்
குடதிருவீ ரட்டானங் கூறு.

[31]
கூறு பெறுங்கன்னி சேர்கருங் கூந்தல்சுண் ணந்துதைந்து
நீறு பெறுந்திரு மேனி நெருப்புப் புரைபொருப்பொத்
தாறு பெறுஞ்சடை அங்கொன்றை யந்தேன் துவலைசிந்த
வீறு பெறுஞ்சென்று சென்றெம் பிரானுக்கு வெண்ணிறமே.

[32]
நிறம்பிறிதாய் உள்மெலிந்து நெஞ்சுருகி வாளா
புறம்புறமே நாள்போக்கு வாளோ நறுந்தேன்
படுமுடியாய்ப்பாய்நீர் பரந்தொழுகும் பாண்டிக்
கொடுமுடியாய் என்றன் கொடி.

[33]
கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்ட கோளரவம்
பிடிக்கில அம்முடிப் பூணலை யத்தொடு மால்விடையின்
இடிக்குரல் கேட்டிடி என்றிறு கக்கடி வாளெயிற்றால்
கடிக்க லுறுமஞ்சி நஞ்சம் இருந்தநின் கண்டத்தையே.

[34]
கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக் கருங்கடல்நஞ்
சுண்டல் புரிந்துகந்த உத்தமற்குத் தொண்டடைந்தார்
கூசுவரே கூற்றைக் குறுகு வரேதீக்கொடுமை
பேசுவரே மற்றொருவர் பேச்சு.

[35]
பேய்ச்சுற்றம் வந்திசை பாடப் பிணமிடு காட்டயலே
தீச்சுற்ற வந்துநின் றாடலென் னாம்செப்பு முப்பொழுதும்
கோச்சுற்ற மாக்குடை வானவர்கோன் அயன் மால்முதலா
மாச்சுற்றம் வந்திறைஞ் சுந்திருப் பொற்சடை மன்னவனே.

[36]
மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து வாளரக்கன்
துன்னுஞ் சுடர்முடிகள் தோள்நெரியத் தன்னைத்
திருச்சத்தி முற்றத்தான் சித்தத்துள் வைத்தான்
திருச்சத்தி முற்றாத்தான் தேசு.

[37]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool