11.021 சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை ( ) |
Back to Top
கபிலதேவ நாயனார் சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை
11.021  
சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான் அந்தியே போலும் அவிர்சடையான் அந்தியின் தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான் வீங்கிருள்சேர் நீல மிடறு.
| [1] |
மிடற்றாழ் கடல்நஞ்சம் வைக்கின்ற ஞான்று மெல் லோதிநல்லாள் மடற்றா மரைக்கைகள் காத்தில வேமழு வாளதனால் அடற்றா தையைஅன்று தாளெறிந் தாற்கருள் செய்தகொள்கைக் கடற்றாழ் வயற்செந்நெல் ஏறும்வெண் காட்டெங் கரும்பினையே.
| [2] |
கருப்புச் சிலை அநங்கன் கட்டழகு சுட்ட நெருப்புத் திருநெற்றி நாட்டம் திருச்சடையில் திங்கள் புரையும் திரள்பொன் திருமேனி எங்கள் இமையோர் இறைக்கு.
| [3] |
இறைக்கோ குறைவில்லை உண்டிறை யேஎழி லார்எருக்கு நறைக்கோ மளக்கொன்றை துன்றும் சடைமுடி நக்கர்சென்றிப் பிறைக்கோர் பிளவும் பெறுவிளிக் கொண்டெம் பிரான்உடுக்கும் குறைக்கோ வணமொழிந் தாற்பின்னை ஏதுங் குறைவில்லையே.
| [4] |
இல்லை பிறவிக் கடலேறல் இன்புறவில் முல்லை கமழும் முதுகுன்றில் கொல்லை விடையானை வேதியனை வெண்மதிசேர் செம்பொற் சடையானைச் சாராதார் தாம்.
| [5] |
தாமரைக் கோவும்நன் மாலும் வணங்கத் தலையிடத்துத் தாம்அரைக் கோவணத் தோடிரந் துண்ணினுஞ் சார்ந்தவர்க்குத் தாமரைக் கோமளத் தோடுஉல காளத் தருவர்கண்டீர் தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடிச் சங்கரரே.
| [6] |
சங்குகோள் எண்ணுவரே பாவையரைத் தம்அங்கம் பங்குபோய் நின்றாலும் பாய்கலுழிக் கங்கை வரியராப் போதும் வளர்சடையாய் நின்போல் பெரியர்ஆ வாரோ பிறர்.
| [7] |
பிறப்பாழ் குழியிடை வீழ்ந்துநை வேற்குநின் பேரருளின் சிறப்பார் திருக்கை தரக்கிற்றியேதிரி யும்புரமூன் றறப்பாய் எரியுற வான்வரை வில்வளைத் தாய்இரவாய் மறப்பா வரியர நாணிடைக் கோத்தகை வானவனே.
| [8] |
வானம் மணிமுகடா மால்வரையே தூணாக ஆன பெரும்பார் அரங்காகக் கானகத்தில் அம்மா முழவதிர ஆடும் பொழுதாரூர் எம்மானுக் கெய்தா திடம்.
| [9] |
இடப்பா கமுமுடை யாள்வரை யின்இள வஞ்சியன்ன மடப்பால் மொழியென்பர் நின்வலப் பாகத்து மான்மழுவும் விடப்பா சனக்கச்சும் இச்சைப் படநீ றணிந்துமிக்க கடப்பார் களிற்றுரி கொண்டுஎங்கும் மூடும்எங் கண்ணுதலே.
| [10] |
கண்ணி இளம்பிறையும் காய்சினத்த மாசுணமும் நண்ணி இருந்தால் நலம்இல்லை தண்அலங்கல் பூங்கொன்றை யின்தேன் பொதியுஞ் சடைப்புனிதா வாங்கொன்றை இன்றே மதித்து.
| [11] |
மதிமயங் கப்பொங்கு கோழிருள் கண்டவ விண்டவர்தம் பதிமயங் கச்செற்ற கொற்றவில் வானவ நற்றவர்சூழ் அதிகைமங் கைத்திரு வீரட்ட வாரிட்ட தேனுமுண்டு கதிமயங் கச்செல்வ தேசெல்வ மாகக் கருதுவதே
| [12] |
கருதுங் கருத்துடையேன் கையுடையேன் கூப்பப் பெரிதும் பிறதிறத்துப் பேசேன் அரிதன்றே யாகப் பிறையான் இனியென் அகம்புகுந்து போகப் பெறுமோ புறம்.
| [13] |
புறமறையப்புரி புன்சடை விட்டெரி பொன்திகழும் நிறமறையத்திரு நீறு துதைந்தது நீள் கடல்நஞ் சுறமறை யக்கொண்ட கண்டமும் சால உறைப்புடைத்தால் அறமறையச்சொல்லி வைத்தையம் வேண்டும் அடிகளுக்கே.
| [14] |
அடியோமைத் தாங்கியோ ஆடை யுடுத்தோ குடியோம்ப மாநிதியங் கொண்டோ பொடியாடும் நெற்றியூர் வாளரவ நீள் சடையாய் நின்ஊரை ஒற்றியூர் ஆக்கிற் றுரை.
| [15] |
உரைவந் துறும்பதத் தேயுரை மின்கள்அன் றாயினிப்பால் நரைவந் துறும்பின்னை வந்துறுங் காலன்நன் முத்திடறித் திரைவந் துறுங்கரைக் கேகலம் வந்துறத் திண்கைவன்றாள் வரைந் துறுங்கடல் மாமறைக் காட்டெம் மணியினையே.
| [16] |
மணியமரும் மாமாட வாய்மூரான் தன்னை அணியமர ரோடயனும் மாலும் துணிசினத்த செஞ்சூட்ட சேவற் கொடியானு மாய்நின்று நஞ்சூட்ட எண்ணியவா நன்று.
| [17] |
நன்றைக் குறும்இரு மல்பெரு மூச்சுநண் ணாதமுன்னம் குன்றைக் குறுவது கொண்டழி யாதறி வீர்செறிமின் கொன்றைக் குறுநறுங் கண்ணியி னான்றன்கொய் பூங்கயிலைக் குன்றைக் குறுகரி தேனும்உள் ளத்திடைக் கொள்மின்களே.
| [18] |
கொண்ட பலிநுமக்கும் கொய்தார்க் குமரர்க்கும் புண்டரிக மாதினுக்கும் போதுமே மண்டி உயிரிழந்தார் சேர்புறங்காட் டோரிவாய் ஈர்ப்ப மயிரிழந்த வெண்டலைவாய் வந்து.
| [19] |
வந்தா றலைக்கும் வலஞ்சுழி வானவ வானவர்தம் அந்தார் மகுடத் தடுத்தபைம் போதில்அந் தேனுழக்கிச் செந்தா மரைச்செல்வி காட்டும் திருவடிக் குஞ்செல்லுமே எந்தாய் அடித்தொண்டர் ஒடிப் பிடித்திட்ட இன்மலரே.
| [20] |
மலர்ந்த மலர்தூவி மாமனத்தைக் கூப்பிப் புலர்ந்தும் புலராத போதும் கலந்திருந்து கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக் காண்பெளியன் தெண்ணீர் சடைக்கரந்த தே.
| [21] |
தேவனைப் பூதப் படையனைக் கோதைத் திருஇதழிப் பூவனைக் காய்சினப் போர்விடை தன்னொடும் போற்றநின்ற மூவனை ஈருரு வாயமுக் கண்ணனை முன்னுமறை நாவனை நான்மற வேன் இவை நான்வல்ல ஞானங்களே.
| [22] |
நானுமென் நல்குரவும் நல்காதார் பல்கடையில் கானிநிமிர்த்து நின்றிரப்பக் கண்டிருக்கும் வானவர்கள் தம்பெருமான் மூவெயிலும் வேவச் சரந்தூற்றல் எம்பெருமான் என்னா இயல்பு.
| [23] |
இயல் இசை நாடக மாய் எழு வேலைக ளாய்வழுவாப் புயலியல் விண்ணொடு மண்முழு தாய்ப்பொழு தாகிநின்ற மயிலியல் மாமறைக் காடர்வெண் காடர்வண் தில்லைமல்கு கயலியல் கண்ணியங் காரன்பர் சித்தத் தடங்குவரே.
| [24] |
அடங்காதார் ஆரொருவர் அங்கொன்றை துன்று மடங்காதல் என்வளைகொள் வார்த்தை நுடங்கிடையீர் ஊருரன் சென்றக்கால் உண்பலிக்கென் றங்ஙனே ஆரூரன் செல்லுமா றங்கு.
| [25] |
அங்கை மறித்தவ ராலவி உண்ணுமவ் வானவர்கள் தங்கை மறித்தறி யார்தொழு தேநிற்பர் தாழ்சடையின் கங்கை மறித்தண வப்பண மாசுணக் கங்கணத்தின் செங்கை மறித்திர விற்சிவன் ஆடுந் திருநட்டமே.
| [26] |
நட்டம்நீ ஆடும் பொழுதத்து நல்லிலயம் கொட்டக் குழிந்தொழிந்த வாகொல்லோ அட்டுக் கடுங்குன்ற மால்யானைக் காருரிவை போர்த்த கொடுங்குன்ற பேயின் கொடிறு.
| [27] |
கொடிறு முரித்தனன் கூறாளன் நல்லன் குருகினஞ்சென் றிடறுங் கழனிப் பழனத் தரசை எழிலிமையோர் படிறு மொழிந்து பருகக் கொடுத்துப் பரவைநஞ்சம் மிடறு தடுத்தது வும்மடி யேங்கள் விதிவசமே.
| [28] |
விதிகரந்த வெவ்வினையேன் மென்குழற்கே வாளா மதுகரமே எத்துக்கு வந்தாய் நதிகரந்த கொட்டுக்காட் டான்சடைமேர் கொன்றைக் குறுந்தெரியல் தொட்டுக்காட் டாய்கழல்வாய் தொக்கு.
| [29] |
தொக்கு வருங்கணம் பாடத்தொல் நீறணிந் தேநிலவு நக்கு வருங்கண்ணி குடிவந் தார்நறும் புன்னைமுன்னம் அக்கு வருங்கழிக் கானல்ஐ யாறரைக் காணஅன்பு மிக்கு வரும்அரும் போதரைக் காண வெள்குவனே.
| [30] |
வெள்காதே உண்பலிக்கு வெண்டலைகொண் டூர்திரிந்தால் எள்காரே வானவர்கள் எம்பெருமான் வள்கூர் வடதிருவீ ரட்டானத் தென்னதிகை மங்கைக் குடதிருவீ ரட்டானங் கூறு.
| [31] |
கூறு பெறுங்கன்னி சேர்கருங் கூந்தல்சுண் ணந்துதைந்து நீறு பெறுந்திரு மேனி நெருப்புப் புரைபொருப்பொத் தாறு பெறுஞ்சடை அங்கொன்றை யந்தேன் துவலைசிந்த வீறு பெறுஞ்சென்று சென்றெம் பிரானுக்கு வெண்ணிறமே.
| [32] |
நிறம்பிறிதாய் உள்மெலிந்து நெஞ்சுருகி வாளா புறம்புறமே நாள்போக்கு வாளோ நறுந்தேன் படுமுடியாய்ப்பாய்நீர் பரந்தொழுகும் பாண்டிக் கொடுமுடியாய் என்றன் கொடி.
| [33] |
கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்ட கோளரவம் பிடிக்கில அம்முடிப் பூணலை யத்தொடு மால்விடையின் இடிக்குரல் கேட்டிடி என்றிறு கக்கடி வாளெயிற்றால் கடிக்க லுறுமஞ்சி நஞ்சம் இருந்தநின் கண்டத்தையே.
| [34] |
கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக் கருங்கடல்நஞ் சுண்டல் புரிந்துகந்த உத்தமற்குத் தொண்டடைந்தார் கூசுவரே கூற்றைக் குறுகு வரேதீக்கொடுமை பேசுவரே மற்றொருவர் பேச்சு.
| [35] |
பேய்ச்சுற்றம் வந்திசை பாடப் பிணமிடு காட்டயலே தீச்சுற்ற வந்துநின் றாடலென் னாம்செப்பு முப்பொழுதும் கோச்சுற்ற மாக்குடை வானவர்கோன் அயன் மால்முதலா மாச்சுற்றம் வந்திறைஞ் சுந்திருப் பொற்சடை மன்னவனே.
| [36] |
மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து வாளரக்கன் துன்னுஞ் சுடர்முடிகள் தோள்நெரியத் தன்னைத் திருச்சத்தி முற்றத்தான் சித்தத்துள் வைத்தான் திருச்சத்தி முற்றாத்தான் தேசு.
| [37] |